(இராஜதுரை ஹஷான்)
அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை நாட்டு மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தின் வெற்றியாகும். நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடி இன்று அரசாங்கத்திற்கு எதிராகவே திரும்பியுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனம் புதிய மதுசார போத்தலில் பழைய மதுசாரத்தை ஊற்றிய செயற்பாடு போன்றதாகும். அரசாங்கத்தின் பெரும்பான்மை இனி கேள்விக்குள்ளாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் அது அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் போதிலிருந்து குறிப்பிட்டு வருகிறோம்.
தவறான பொருளாதார முகாமைத்துவத்தை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடமும், நிதியமைச்சரிடமும் தொடர்ந்து குறிப்பிட்டோம்.
சிறந்த ஆலோசனைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை நாங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு எம்மை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்கள்.
இன்று என்னவாயிற்று அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய நெருக்கடி இன்று அரசாங்கத்திற்கு எதிராகவே திரும்பி பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கியுள்ளார்கள்.
அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகத் தீர்மானித்துள்ளமை நாட்டு மக்கள் பெற்றுக் கொண்ட பிரதான வெற்றியாகும்.
அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகுவதாக தீர்மானித்தால் இராஜினாமா பத்திரத்தை ஜனாதிபதிக்கே வழங்க வேண்டும். பிரதமரிடம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
ஆகவே அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகத் தீர்மானித்ததாக குறிப்பிடப்படும் செய்தி எந்தளவிற்கு உண்மையானது என நம்பிக்கை கொள்ள முடியாத தன்மை காணப்படுகிறது.
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இனி எவ்வாறு நிலைத்து நிற்கும் என்பதை பாராளுமன்றின் ஊடாக வெளிப்படுத்துவோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை, இரண்டின் இரண்டு பெரும்பான்மையாகவும், ஒன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும் மாற்றமடையலாம்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு சிறந்த இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போது ஒரு சில அமைச்சுக்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளமை பழைய மதுசாரத்தை புதிய போத்தலில் ஊற்றியதொரு செயற்பாடு போன்றதாக அமைந்துள்ளது.
அமைச்சுப் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு நாட்டு மக்கள் கோரவில்லை. முழுமையான தலைமைத்துவம் மாற்றமடைய வேண்டும் என்றே நாட்டு மக்கள் கோருகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment