(எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா இதற்கான உத்தரவை இன்று (29) மாலை பிறப்பித்தார்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தேகநபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை பார்வையிட்ட பின்னர், நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி அவர் சிறைச்சாலை காவலர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றார்.
அத்துடன் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய பொலிஸ் குழுவில் அங்கம் வகித்த மூன்று கான்ஸ்டபிள்கள் கண்டி - குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் நேற்று இரவு அவர்களையும் கைது செய்தனர்.
அம்மூவரையும் இன்று (29) தெல்தெனிய நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு மே 13 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைத்த உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான குழுவினர், துப்பாக்கிச் சூட்டை நடாத்த கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை, நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் வைத்து நேற்று (28) மாலை கைது செய்திருந்ததுடன், பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினர் ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களைக் கைது செய்திருந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன பொலிஸ் மா அதிபருக்கு கடந்த 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
அந்த நீதிமன்ற உத்தரவு நேற்று (28) பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்ததாக கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, அந்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமுல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறினார். இந் நிலையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கேகாலை நீதிமன்றின் உத்தரவை அடுத்து தொடர்புபட்ட அதிகாரிகள், திடீர் சுகயீனம் எனக் கூறி பொலிஸ் வைத்தியசாலைகலில் அனுமதியாகியிருந்த நிலையிலேயே அங்கு சென்று சி.ஐ.டி.யினர் அவர்களைக் கைது செய்திருந்தனர்.
ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு கேகாலை நீதிமன்றில் விசாரிக்கப்படுகிறது.
கடந்த 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றையதினம் மாலை பொலிசாரால் பலப்பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர்ப் புகைத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.
ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப்பதிவில் தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக் கொண்டிருந்த போது, சாமிந்த லக்ஷான் மீது பின்னால் இருந்து சுடப்பட்டதாக நீதவான் விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார்.
மரண பரிசோதனைகளிடையே சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன, தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மரணத்துக்கு துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமே காரணம் என கேகாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, சாட்சியம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிவான் திறந்த மன்றில் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த மரணமானது சந்தேகத்துக்கு இடமானது என தீர்மானித்த நீதிவான் வாசனா நவரட்ன, குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்ட அதிகாரி, அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment