(எம்.எப்.எம்.பஸீர்)
திடீர் அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு என நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 97 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் வண்டியை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பிலான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த இது தொடர்பிலான வழக்கு இன்று ( 29) விசாரணைக்கு வந்த போது, கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தர்வை பிறப்பித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 186 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, மீள வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிபந்தனையின் கீழ், குறித்த வழக்கை முன்கொண்டு செல்ல தீர்மானமில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரதான நீதிவானுக்கு அறிவித்த நிலையிலேயே அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வாகன பயன்பாடு ஊடாக அரசாங்கத்துக்கு 10 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா நட்டத்தை பெளஸி ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் கடந்த 2016 ஒக்டோபர் 7 ஆம் திகதி இந்த வழக்கை தாக்கல் செய்தது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அப்போதைய இராஜாங்க அமைச்சர் பெளஸி 10 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்ததாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு நெதர்லாந்தினால் குறித்த ஒரு கோடியே 97 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியானது அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அவசர அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக நெதர்லாந்தினால் வழங்கப்பட்டதாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், எனினும் அந்த ஜீபானது 2011 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஏ.எச்.எம். பெளஸியினால் தனது சொந்த தேவைகளின் நிமித்தம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதன்படி அவருக்கு எதிராக நான்கு குற்றச் சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கானது இலஞ்ச ஊலல் ஆணைக் குழுவினால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment