(எம்.மனோசித்ரா)
காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டில் செயற்படும் மனித உரிமைகள் தொடர்பான சிவில் சமூக அமைப்புக்கள் இந்த நடவடிக்கைக்கு உயர்மட்டத்தில் மதிப்பளிக்கும் என்று நம்புவதோடு, தமிழ் ஊடகங்கள் இதற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில், 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது மிகவும் முக்கியத்துவமுடையதொரு விடயமாகும். 1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பில் 14988 எழுத்து மூல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பில் செயற்பட்டு வரும் சிவில் அமைப்புக்கள் இந்த நடவடிக்கைக்கு உயர் மட்டத்தில் மதிப்பளிக்கும் என்று நம்புகின்றோம்.
இது ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். இதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு சகலரதும் ஒத்துழைப்புக்களை கோருவதோடு, குறிப்பாக தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் இதற்கு கிடைக்கப் பெறும் என்று நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment