(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்வரும் 15 ஆம் திகதி பெண்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைத்து ஆக்கிரமிப்போம், முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை தடுத்துக் காட்டுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சபையில் சவால் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் பேசுகையில், இந்த அரசாங்கத்தின் புலமை சொத்து என்னவென்றால் டொலர் கறுப்பு சந்தையாகும். டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளது.
எரிவாயு, எரிபொருள், பால்மாவிற்கான நீண்ட வரிசையே இந்த ஆட்சியின் அடையாளமாகும். நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையாகும்.
இன்று பெண்கள் தினமாகும், ஆனால் பெண்கள் தினத்தை கொண்டாடிக் கொண்டு நாட்டில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களின் பிரச்சினைகளை பேச சென்றால் அவர்களும் அரசாங்கத்தினால் தாக்குதலுக்கு உற்படுத்தப்படுகின்றனர். எனக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த அரசாங்கத்தினால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது போய்விட்டது.
ஹிருணிகாவின் வீட்டிற்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நாளாகவும் வீட்டுக்கு அடாவடிக்காரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஹிருணிகா ராஜபக்ஷவினரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தனர், அவரையே தாக்கவும் அச்சுறுத்தவும் அடியாட்களை அனுப்பியுள்ளனர். கட்சி அலுவல்களும் தாக்கப்பட்டது.
கல்விமான்கள் என கூறிக் கொண்டு மாடுகள் போன்று செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் தொடர்புபட்டுள்ளனர். 15 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம், பெண்களை ஒன்றிணைந்து கொழும்பை ஆக்கிரமிப்போம், முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை நிறுத்திக் காட்டுங்கள் என்றார்.
No comments:
Post a Comment