எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதால் என்ன பயன் ? - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 25, 2022

எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதால் என்ன பயன் ? - கபீர் ஹாசீம்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்ட நிர்மாணம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா? வீதிப் போக்குவரத்திற்குத் தேவையான எரிபொருள் இல்லாதபட்சத்தில், அதிவேக நெடுஞ்சாலைகளால் என்ன பயன்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாடு மிகத்தீவிரமான டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் வசமுள்ள நிதியை மிகுந்த அவதானத்துடன் உரியவாறு கையாள வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

அதனை முன்னிறுத்தி பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாம் கேள்விகளை எழுப்பும்போது, அரசாங்கம் அதற்கு உரியவாறான பதில்களை வழங்குவதற்குத் தவறுவதுடன் எதிர்ப்பையும் வெளியிடுகின்றது.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் நிகழக்கூடிய ஊழல் மோசடிகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றது. இந்த நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பை ஒப்படைப்பதற்கான விலை மனுக்கோரல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் அதன் பிரகாரம் 20 கிலோ மீற்றர் நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனமொன்றிடமும் எஞ்சியதை நிர்மாணிக்கும் பணியை உள்நாட்டு நிறுவனமொன்றிடமும் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை இரத்துச் செய்து இந்த நிர்மாணப் பணிகளை வேறு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தை இரத்துச் செய்து, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் அந்த இரு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரியவாறு பதிலளிக்கவில்லை.

அதேவேளை அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவரும் சூழ்நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா என்ற கேள்வியும் எம்மத்தியில் எழுந்துள்ளது.

வீதிப் போக்குவரத்திற்குத் தேவையான எரிபொருள் இல்லாத நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளால் என்ன பயன்? ஆகவே நெடுஞ்சாலை நிர்மாணம் தற்போது அவசியமற்ற விடயம் என்பதை சுட்டிக்காட்டும் அதேவேளை, இது குறித்த விலை மனுக்கோரல் விவகாரத்தில் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிப்பட்டிருக்கின்றதா என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசவில்லை. மாறாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், தேசிய ரீதியான நலனை இலக்காகக் கொண்டு மாத்திரமே இவ்விடயம் தொடர்பில் பேசினோம். அதுமாத்திரமன்றி இது குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்தபோது இலாபத்தை ஈட்டித்தரக் கூடிய புதிய கட்டுமானங்களையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதேபோன்று நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி எமது கட்சி உள்ளடங்கலாகப் பல்வேறு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கைக்கு அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இது விடயத்தில் ஒன்றிணைந்து செயலாற்றவதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment