சர்வதேச சமூகத்தை மகிழ்விக்க நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட முடியாது : யுத்தத்தை தோற்றுவித்த புலிகள் அமைப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை - இலங்கை வெளிவிவகார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, February 25, 2022

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்க நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட முடியாது : யுத்தத்தை தோற்றுவித்த புலிகள் அமைப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை - இலங்கை வெளிவிவகார அமைச்சு

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புக் கூறலையும் நிறைவேற்ற அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை நாட்டின் பொதுச் சட்டத்திற்கமைய முன்னெடுத்துள்ளது. சர்வதேச சமூகத்தை மகிழ்விக்க நாட்டின் இறையாண்மைக்கு முரணாக ஒருபோதும் செயற்பட முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. பலம் வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும். ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடல்ல இலங்கைக்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்பிலான கூட்டத் தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 49ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய யோசனைகளும், வாக்கெடுப்பும் இடம்பெறாது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.

ஆணையாளரின் அறிக்கைக்கு ஏற்கெனவே பதிலளித்துள்ளோம். அறிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடின் ஆணையாளர் ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையினை மீண்டும் பேரவையில் சமர்ப்பிப்பார்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களை மையப்படுத்தியதாக காணப்படுகிறது.

பாராளுமன்றம், ஜனாதிபதியின் செயற்பாடுகள், அரச கட்டமைப்பு, நீதிமன்ற கட்டமைப்பு ஆகிய துறைகள் குறித்து ஆணையாளர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது மனித உரிமை பேரவையின் விடயதானங்களுக்கு பொறுப்பானதல்ல.

இலங்கையில் இராணுவ ஆட்சி நடைமுறையில் இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு எதிராக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அநீதியானது.

இலங்கை இருமுறை தீவிரவாத குழுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால சிவில் யுத்தம் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின மத அடிப்படைவாதிகளின் தாக்குதலும் பாரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இலங்கை தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. தீவிரவாத செயற்பாட்டை இல்லாதொழித்து அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரையும், அப்போதைய அரசாங்கத்தையும் குற்றவாளிகளாக கருதும் சர்வதேசம் யுத்தத்தை தோற்றுவித்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை.

மனித உரிமை மீறல்கள் செயற்பாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஈடுப்பட்டதற்கு எதிராக சர்வதேச அரங்கில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளினால் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்பில் யுத்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுவது நாளுக்குநாள் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையினதும், அதன் உறுப்பு சபைகளினதும் கொள்கைகளை இலங்கை முறையாக பின்பற்றுகிறது.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பல விடயங்களில் முன்னேற்றகரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட்டு முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பும், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை அமைதியான நாடு என்பதை வெளிப்படைத் தன்மையும் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புக் குகூறலையும் செயற்படுத்த அரசாங்கம் தேசிய இறையாண்மையின் கொள்கைகளுக்கு அமைய செயற்படுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயற்பட முடியாது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்படல்ல அது இலங்கைக்கு எதிரான செயற்பாடு என்பதை இலங்கை மக்கள் அனைவரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு என்ற ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்தால் மாத்திரமே சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment