(எம்.மனோசித்ரா)
ஒமிக்ரோன் வைரஸின் இரண்டாவது துணை அலகு இனங்காணப்பட்டுள்ளது. பீ.ஏ.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த துணை அலகு மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் ஒமிக்ரோன் பிரதான வைரஸாக மாற்றமடைந்துள்ளது. எனினும் வெற்றிகரமான தடுப்பூசி வழங்கலின் ஊடாக மக்கள் வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது. எவ்வாறிருப்பினும் கொவிட் தொற்று நிலைமை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது தடுப்பூசியின் ஊடாக வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த கட்டுப்பாட்டை மீறி வைரஸ் பரவலால் பாரிய அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் வீதம் டெல்டாவை விடக் குறைவாகும். எனினும் ஒமிக்ரோன் பரவும் வேகம் அதிகமாகும். அத்தோடு வெகுவிரைவில் பல உப அலகுகளை தோற்றுவிக்கக் கூடியதுமாகும். இவ்வாறு புதிய உப அலகுகள் உருவாகும் போது, அதன் பரவல் வேகமும் பன்மடங்கு அதிகரிக்கும்.
எனவே ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மீண்டும் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய நிலைமையும் காணப்படுகிறது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளானாலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் பாரிய அபாயங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.
இந்த ஆண்டிலாவது முழுமையாக கொவிட் தொற்றிலிருந்து மீள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போது ஒமிக்ரோன் வைரஸின் இரண்டாவது துணை அலகு இனங்காணப்பட்டுள்ளது.
பீ.ஏ.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த துணை அலகு மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்றார்.
No comments:
Post a Comment