(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையாது. இனிவரும் நாட்களில் கட்டம் கட்டமாக விலை குறைவடையாது என தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற சிறந்த அமைச்சினை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளன.
வரி குறைக்கப்பட்டவுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையாது. எதிர்வரும் நாட்களில் கட்டம் கட்டமாக விலை குறைவடையும் அதற்கான நடவடிக்கை வர்த்தகத்துறை அமைச்சு மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சவால்மிக்க அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் வர்த்தகத்துறை அமைச்சின் நோக்கத்தினை சிறந்த முறையில் அடைந்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் சிறந்த அமைச்சினை எதிர்பார்த்துள்ளேன்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காவிட்டாலும் எதிர்த்தரப்பினர் விமர்சிக்கிறார்கள், நிவாரணம் வழங்கினாலும் விமர்சிக்கிறார்கள். எதிர்த்தரப்பில் உள்ள ஒரு சில சிறந்த அரசியல்வாதிகளும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகளை போல் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் கருத்துரைப்பது முறையற்றதாகும் என்றார்.
No comments:
Post a Comment