பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு : ஒமிக்ரோனை விட அதிவேகமாக தொற்றும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு : ஒமிக்ரோனை விட அதிவேகமாக தொற்றும்

பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒமிக்ரோன் வைரசை விட அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரசால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரசை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்சின் மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமிக்ரோன் வைரசை விட அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோனை விட 46 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

தற்போது ஒமிக்ரோன் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment