கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையினை இன்று (09) அதிகாலை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
ரயில் சேவையினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்த ஆரம்ப ரயில் சேவையில் பயணித்த நிலையில் அமைச்சரை பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில் நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது. காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து 1.37 மணிக்கு சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை இன்று முதல் மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை 360 ஆக அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள் (DMU) இரண்டை இலங்கைக்கு வழங்கியது. அவற்றில் ஒன்று வடக்குக்கான சேவையில் இன்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மாஹோ முதல் ஓமந்தை வரையிலான 128 கிலோ மீற்றர் ரயில் பாதை சீரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்காவலை முதல் குருநாகல் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment