திருட்டு தொடர்பில் தீர்ப்பதாக கூறி கப்பம் கோரிய போலி CID விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

திருட்டு தொடர்பில் தீர்ப்பதாக கூறி கப்பம் கோரிய போலி CID விளக்கமறியலில்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

திருட்டு விசாரணையொன்றினைச் சமாளிப்பதற்கு கப்பம் கோரி கைதாகிய போலி சி.ஐ.டி ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி, உப்போடை புறநகர்ப்பகுதியில் அண்மையில் நகை திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் குறித்த திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாகக்கூறி அவ்விடத்திலிருந்து சென்றுள்ள நிலையில், அதே வீட்டிற்கு சில நிமிடத்திற்கு மற்றுமொரு போலி சி.ஐ.டி எனக்கூறப்படும் நபரொருவர் சென்றுள்ளதுடன், ரூபா 10 ஆயிரம் கப்பமாக தந்தால் குறித்த பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுகமைய அன்றிரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வைத்திருந்த அடையாள அட்டையில் கல்வியமைச்சினால் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கல்விப் பணிப்பாளர் எனப் பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (6) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment