தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல தமிழ் முற்போக்கு கூட்டணி, இது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்கள் கூட்டணி, அதன் காரணமாகவே இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதான கட்சியாக இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி திகழ்கின்றது.மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்கம் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய முக்கிய மூன்று அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே இந்த அமைப்பாகும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக ஒரே பாதையில் பயணித்து இலங்கையின் அரசியல் தளத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பதிவு செய்து கொண்டுள்ள காரணத்தால் இந்த அமைப்பை ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார். அதற்கு டோச் லைட் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு கூட்டணியாக செயற்பட்டு 6 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்ற அளவிற்கு கடந்த காலங்களில் இதன் வளர்ச்சி இருந்திருக்கின்றது.
இந்த கட்சியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்வதற்காக இதற்காக முழுமையாக ஒத்துழைத்த இதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதன் செயலாளர் நாயகம் சந்திரா சாப்டர் உட்பட அனைவரையும் பாராட்டுகின்றேன்.
இந்த முயற்சியில் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்த ஆரம்ப கால செயலாளராக இருந்த ஏ.லோரன்ஸின் பங்களிப்பு அளப்பரியது அவரையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது இன்று இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லை எட்டி இருக்கின்றது.ஏனைய கூட்டணிகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றது.
நுவரெலியா நிருபர்
No comments:
Post a Comment