தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு கிழக்கு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
செலவினக் குறைப்பு பிரேரணயை முன்வைக்க பெயரிடப்பட்ட 33 எதிரணி எம்.பிக்களிடையே ஒரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியின் பெயர் கூட உள்வாங்கப்படவில்லயென்று தெரிவித்த அவர் ஜே.வி.பி எம்.பிக்களின் பெயர்கள் கூட அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. இதன் போது கருத்துத் தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, செலவின குறைப்பு பிரேரணையை முன்வைக்க 33 எம்.பிக்களின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரது பெயரும் உள்ளடக்கப்படவில்லை. அது அநீதியானது. அவர்களது தீர்மானம் என்பது வேறு விடயம். ஆனால் வடக்கு கிழக்கு பிரச்சினைகளை பேச இடமளிக்க வேண்டும்.
வரவு செவலவுத் திட்டம் 2022 குழுநிலை விவாதத்தின் போது சம்பிரதாயபூர்வமாக அமைச்சின் செலவினத் தலைமைப்புக்களின் தொகை குறைப்புப் பிரேரணைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் எதிர்க்கட்சியில் இரண்டாவது இடத்திற்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ள (10) கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரது பெயரும் அதில் உள்ளடக்கப்படவில்லை.
இதன் காரணமாக 2020.12.06 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அமைச்சுக்கள் தொடர்பாக, விசேடமாக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு இருந்த வாய்ப்பு நழுவிப்போனது.
மேலும் சாதாரண விவாதங்களின் போது எதிர்க்கட்சிக்குக் கிடைக்கப் பெறுவது உரையாற்றுவதற்கான மொத்த காலத்தில் 40% ஆக உள்ளமையால் எமது கட்சிக்கு அதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற காலமானது மேலும் வரையறுக்கப்படுகின்றது.
எனினும் வரவு செயலவுத் திட்டத்தின் குழுநிலையின் போது எதிர்க்கட்சிக்கு 60% உரையாற்றுவதற்கு காலம் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாய்ப்பு கிடைக்கப் பெறாமை மூலம் எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியில் இரண்டாவது இடத்திற்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் சம்பிரதாயபூர்வமாக தொகை குறைப்புப் பிரேரணையை முன்வைப்பதற்கு எனக்கு வாய்ப்பைப் பெற்றுத்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன் என்றார். தங்களது பெயர்களையும் செலவின குறைப்பு பிரேரணை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையின் போது கருத்துத் தெரிவித்த ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
கடந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே அதிகமாக வாக்களித்தனர். ஆனால் அவரோ, அந்த மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். ஜனநாயகம் இல்லை என்று சபை பகிஷ்கரிப்பை மேற்கொள்ளும் இவர் தனது முன்னாள் அமைச்சு தொடர்பான விவாதத்தை தவிர்க்கவே இப்படி செயற்பட்டார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய விடயம் முக்கியமானது. அவரின் கட்சி எம்.பிக்கள் எவரின் பெயரும் பட்டியிலில் சேர்க்கப்படவில்லை என்றார்.
ஆனால் இது குறித்து முன்கூட்டி அறிவித்திருக்க வேண்டும் எனவும் தற்பொழுது எதுவும் செய்ய முடியதெனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதேவேளை டிலான் பெரேரா எம்.பி கருத்துத் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பிரதான இனக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி. 33 பேர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அந்த இனக்குழுவிற்கு பாரிய அநீதி செய்துள்ளார். இந்த அநீதியை மாற்றிமைக்க வேண்டும் என்றார்.
சுரேன் ராகவன் எம்பி கருத்துத் தெரிவிக்கையில், எமது நாட்டின் ஜனநாயகம் குறித்து முழு நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதனை ஐக்கிய மக்கள் சக்தி மீறி செயற்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வந்துள்ள அவருக்கு பேச இடமளிக்க வேண்டும் என்றார். அவருக்கு பேச இடமளிப்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அடிப்படை செயற்பாடாக அமையும் என்றார்.
திருத்தங்கள் முன்வைக்கப்படும் போது பேச அனுமதிப்பதாக சபாநாயகர் இதன்போது அறிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment