(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது நாம் உலகளாவிய ரீதியில் நெருக்கடிகள் ஐந்துக்கு மத்தியில் வாழ்கின்ற சந்தர்ப்பமொன்றிலாகும் என தெரிவித்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அவை ஐந்தையும் சபையில் தெளிவுபடுத்தினார்.
பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், முதலாவது, உலகில் என்றுமில்லாதவாறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகக் காணப்படுவதாகும். அல்லது செல்வந்தர்கள் மற்றும் கம்பனிகள் மென்மேலும் தொடர்ந்து செல்வந்தர்களாக இருக்க, வறியவர்கள் மென்மேலும் வறியவர்களாகவே இருக்கும் நிலையாகும்.
இரண்டாவது, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்கின்ற முன்னேற்றம் குறைவடைகின்றமையாகும். இது எம்மைப் போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு மிகவும் கடுமையானதாகும்.
அதிகளவு புவி வெப்பமடைவதனால் அதிகரித்த சுற்றாடல் பேரிடரானது, மூன்றாவது நெருக்கடியாகும். தற்பொழுது அபிவிருத்தியடைந்த அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற பாகுபாடின்றி பெரும்பாலான நாடுகள் பல்வேறுபட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
நான்காவது, நெருக்கடியானது, வரலாற்றில் இதற்கு முன்னர் என்றுமில்லாதவாறு இருதரப்பு மற்றும் பல்தரப்பு உதவிகள் வரையறுக்கப்பட்டிருப்பதாகும். இதற்குக் காரணம் அனைத்து செல்வந்த நாடுகளும் தமது உள்ளக நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விசேட முன்னுரிமை வழங்கியுள்ளமையாகும்.
ஐந்தாவது, நெருக்கடியானது, கொறோனாவின் பின்னர் ஏற்பட்டுள்ள “புதிய சாதாரணநிலை” க்கு ஏற்ப தகவமைக்க வேண்டியுள்ளமையாகும். பயணத் தடை, வீட்டிலிருந்து வேலை செய்தல், பொருட்களின் விலையேற்றம் மற்றும் உற்பத்தித் தொழிற்றுறையின் வலையமைப்பு உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றமை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு நாம் சமகாலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment