சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது அமெரிக்கா எனும்போது போர்க் கொடி தூக்குவது நகைப்புக்குரியது - ரஞ்சித் விதானகே - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது அமெரிக்கா எனும்போது போர்க் கொடி தூக்குவது நகைப்புக்குரியது - ரஞ்சித் விதானகே

(இராஜதுரை ஹஷான்)

இயற்கை திரவ எரிவாயு திட்டம் செயற்படுத்தப்பட்டால் மின் பாவனையாளர்கள் பயனடைவார்கள். டீசல் மாபியாக்கு ஆதரவாகவே யுகதனவி மின் நிலைய ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் தீவரமடைந்துள்ளன. நாட்டின் தேசிய வளங்களை சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்த தொழிற்சங்கத்தினர், தற்போது அமெரிக்கா என்று குறிப்பிடும் போது போர்க் கொடி தூக்குவது நகைப்புக்குரியது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மின் கட்டமைப்பில் இயற்கை திரவ எரிவாயுவிற்கான தேவை 2008ஆம் ஆண்டு காலம் முதல் அவசியமாக காணப்பட்டது. இதற்கான விலை மனுக்கோரல் அக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டது.

இயற்கை திரவ எரிவாயு ஊடாக இயங்குவதற்கான மனுக்கோரல் விடுக்கப்பட்டு யுகதனவி மின் நிலையம் டீசலினால் இயங்குகிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த மின் பாவனையாளர்களும் 1 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தற்போது அமெரிக்காவின் நியூபோரட் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இயற்கை திரவ எரிவாயு திட்டத்தை செயற்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் பிரதானமாக உள்ளது. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக மின்சார சேவையாளர்களும் அரசியல்வாதிகளும் தற்போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

நாட்டிற்கு இயற்கை திரவ எரிவாயு திட்டத்தை கொண்டுவருவதற்கு மின்சாரத்துறை சேவை சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கிகாரத்துடன் விலை மனுக்கோரல் வழங்கப்பட்டது. அதற்கு மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து அந்த செயற்திட்டத்தை முழுமையாக இல்லாதொழித்தார்கள்.

இயற்கை திரவ எரிவாயு திட்டம் செயற்படுத்தப்பட்டால் மின் பாவனையாளர்கள் முழுமையாக பயனடைவார்கள். மின் கட்டணம் 25 சதவீதத்தினால் குறைவடையும்.

இயற்கை திரவ எரிவாயு திட்டம் வெற்றி பெற்றால் டீசல் மாபியாக்கல் நட்டமடைவார்கள். டீசல் மாபியக்களை பாதுகாப்பதற்காகவே தற்போது அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் பிரதான தேசிய வளங்களை சீனாவிற்கு அரசாங்கம் வழங்கும் போது அமைதியாயிருந்த தொழிற்சங்கங்கள் தற்போது அமெரிக்கா என்று வரும் போது எதிர்ப்பு தெரிவிப்பது நகைப்புக்குரியது.

அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் செயற்திட்டங்களில் இடைத்தரகர்கள் கையூட்டல் பெற முடியாது என்பதன் காரணமாகவே இவர்கள் தொடர்ந்து சீனாவின் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment