பேலியகொடை - நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

பேலியகொடை - நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல்

(நா.தனுஜா)

பேலியகொடை முதல் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருதல் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் நேற்றையதினம் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

பேலியகொடை - நீர்கொழும்பு வரையான முத்துராஜவெல வனப் பகுதிக்குச் சொந்தமான கரையோரப் பகுதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி.அலவத்துவல, முஜிபுர் ரகுமான், ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மேற்படி மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இதுவரையான காலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்த பேலியகொடை - நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதி, தற்போது எதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுகின்றது? என்ற வலுவான சந்தேகம் எழுந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் காணிகளையும் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஓரங்கமாகவே இது குறித்த வர்த்தமானி அறித்தலையும் நோக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நகர அபிவிருத்தி அதிகார சபை என்பது அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயங்களுக்கு மாத்திரம் பொறுப்பான அரச கட்டமைப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், எனினும் இவ்விவகாரம் சுற்றாடலுடன் தொடர்புடையதாகும் என்றும் அதற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறிருக்கையில் அக்கரையோரப் பகுதிகளை எதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்குக் கீழ் கொண்டுவரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது? என்று கேள்வி எழுப்பிய அவர், அதற்கெதிராகவே தாம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment