போராட்டக் குழுவான அல் ஷபாபை விமர்சித்து வந்த சோமாலியாவின் முன்னணி ஊடகவியலாளர் அப்தியசிஸ் மஹமுத் குலத், தலைநகர் மொகடிஷுவில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார்.
அப்தியசிஸ் அப்ரிகா என்றும் அறியப்படும் அவர் கடந்த சனிக்கிழமை நண்பகலில் உணவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நிலையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அருகில் இருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஊடகவியலாளரை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியதாக அல் ஷபாப் குறிப்பிட்டுள்ளது. அவர் ‘ரேடியோ மொகடிஷு‘ வானொலியில் பணியாற்றி வருகிறார்.
சோமாலிய தேசிய தொலைக்காட்சியின் பணிப்பாளர் மற்றும் ஓட்டுநர் ஒருவருடன் குலத் இருக்கும்போது உணவு விடுதிக்கு அருகில் கார் ஒன்றுக்கு முன்னால் தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டிருக்கும் அல் ஷபாப் சந்தேக நபர்களை நேர்காணல் செய்து ஒலிபரப்புவதில் பெரிதும் அறியப்பட்டு வந்த குலத்தின் நிகழ்ச்சிகள் அதிகமானோரை கவர்ந்துள்ளது.
அல் ஷபாப் குழு ஐ.நா ஆதரவு அரச துருப்புகளுடன் ஒரு தசாப்தத்திற்கு மேலாக போராடி வருகிறது.
No comments:
Post a Comment