சட்டமா அதிபரால் வாபஸ் பெறப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களின் எண்ணிக்கை, வழக்கு விபரங்கள் எத்தனை ? - தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பமூடாக பெற முஜிபுர் ரகுமான் நடடிவக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

சட்டமா அதிபரால் வாபஸ் பெறப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களின் எண்ணிக்கை, வழக்கு விபரங்கள் எத்தனை ? - தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பமூடாக பெற முஜிபுர் ரகுமான் நடடிவக்கை

(நா.தனுஜா)

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதிக்குப் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய வழக்குகளின் விபரங்களைக்கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் நேற்றையதினம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பமொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், ஜே.சி.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, காவிந்த ஜயவர்தன உள்ளிட்டோர் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் சென்று இந்த தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தைக் கையளித்துள்ளனர்.

மேற்படி தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தில் தகவல்களைக் கோருபவராக முஜிபுர் ரகுமானின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல் அதிகாரியிடமிருந்தே அத்தகவல்களைக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதியின் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ள குற்றப்பத்திரங்களின் எண்ணிக்கை, 2019 நவம்பர் 19 ஆம் திகதியின் பின்னர் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்ட குற்றப்பத்திரங்களில் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ளவர்கள், மேற்குறிப்பிட்ட திகதியின் பின்னர் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்ட குற்றப்பத்திரங்களின் வழக்கு இலக்கங்கள், எந்தெந்தத் திகதிகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்கள் 2019 நவம்பர் 19 ஆம் திகதியின் பின்னர் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களே மேற்படி தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தின் ஊடாகக் கோரப்பட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கூறியிருப்பதாவது, நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் அதேவேளை சட்டத்தின் பிரகாரம் செயற்படும் சமுதாயத்தையும் உருவாக்குவதாகக் கூறியே கடந்த 2019 நவம்பர் 19 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதுமாத்திரமன்றி தனக்கு நெருக்கமானவர்கள் சட்டத்தை மீறுவதற்கோ அல்லது அதனைத் தவறாகப் பயன்படுத்துவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தேர்தல் பிரசாரங்களின்போது குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது நடைபெறும் சம்பவங்கள் அதற்கு முற்றிலும் நேர்மாறானவையாகவே காணப்படுகின்றன. 2019 நவம்பர் 19 ஆம் திகதிக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்கள், அவர்களுக்கு உதவிகளை வழங்கிய அரச அதிகாரிகள் உள்ளடங்கலாகப் பலருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

ஆனால் தற்போது அவ்வழக்குகள் அனைத்தும் சட்டமா அதிபரினால் ஒன்றன்பின் ஒன்றாக வாபஸ் பெறப்பட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

ஒருவர்மீது ஏதேனுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பட்சத்தில், தான் நிரபராதி என்பதை அவர் நீதிமன்றத்தின் ஊடாகவே நிரூபிக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சுமார் 20 இற்கும் மேற்பட்டவை அண்மைக்காலத்தில் சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

ஆகவே இது குறித்து முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளும் நோக்கிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பமொன்றைத் தாக்கல் செய்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment