எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க பருவநிலை மாநாட்டில் உலக தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 26 ஆவது பருவநிலை மாநாடு கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமானது.
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் இம்மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாரீஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம், புவி வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்பாட்டில் காடுகள் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கனடா, ரஷ்யா, பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, கொங்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலக காடுகளில் 85 சதவீத காடுகள், இந்த நாடுகளில்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள், காடுகள் அழிப்புக்கும், நிலம் சீரழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் இதன்போது உறுதி எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பான பிரகடனத்தில் சீனா, பிரேசில் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால், இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டது.
No comments:
Post a Comment