புதிய தேர்தல் சட்டம் இயற்றாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது : உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடும் உரிமை உள்ளது - பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

புதிய தேர்தல் சட்டம் இயற்றாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது : உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடும் உரிமை உள்ளது - பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் புதிய தேர்தல் சட்டம் இயற்றாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு நல்லாட்சியின் அரச தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடும் உரிமை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சருக்கு உண்டு என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தலையும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் விரைவாக நடத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் செல்வதற்கு பயந்து நல்லாட்சி அரசாங்கத்தை போன்று தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் கிடையாது கொவிட்-19 பெருந்தொற்று பரவலை அடிப்படையாகக் கொண்ட சுகாதார பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்றது. உள்ளுராட்சி மன்றின் 4 வருட கால பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா,முடியாதா என்ற தீர்மானம் அப்போதைய சுகாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும்.

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவு பெறும் காலத்தில் இருந்து மேலும் ஒரு வருட காலத்திற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் பதவி காலத்தை நீடிப்பதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பிலான சிக்கல் நிலையை நல்லாட்சி அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து திட்டமிட்ட வகையில் உருவாக்கியது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வுகாண வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் புதிய சட்டத்தை இயற்றாமல் மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய சட்டம் இயற்றுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் தேர்தல் முறைமை தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. ஆகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment