(எம்.மனோசித்ரா)
நாய்கள் குரைக்கின்றன என்பதற்காக நிலவிற்கு களங்கம் ஏற்படாது. பொதுஜன பெரமுனவிலுள்ள சிலர் சுதந்திர கட்சியை விமர்சிக்கின்றனர் என்பதற்காக நாம் எமது இலக்கு நோக்கிய பயணத்தை இடை நிறுத்திவிடப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 18 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் பொதுஜன பெரமுனவினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை அறியாதவர்களே எம்மை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திற்கான புதிய தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை திங்கட்கிழமை (22) சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , பொதுஜன முன்னணியின் பங்காளி கட்சியாகும். பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பல இணக்கப்பாடுகள் பல உள்ளன. எனினும் தற்போது வேகமாக மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கட்சி ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினராலும் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றன.
நாடளாவிய ரீதியிலுள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களங்களுக்கு இளைஞர் யுவதிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதன் ஊடாக எதிர்பார்ப்புக்கள் எந்தளவிற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது சுவர்களில் சித்திரங்களை வரைந்து பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இளம் தலைமுறையினர் இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 18 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்கா விட்டால் பொதுஜன பெரமுனவினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை அறியாதவர்களே எம்மை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இரவில் நாய்கள் குரைக்கின்றன என்பதற்காக நிலவிற்கு கலங்கம் ஏற்படாது. எனவே எம்மை விமர்த்துக் கொண்டிருப்பவர்களால் எமது செயற்பாடுகள் எவையும் ஸ்தம்பித்து விடாது.
நாம் எமது இலக்கை நோக்கி பயணிப்போம். ஆரோக்கியமான விவாதங்களுக்கே நாம் தயாராக இருக்கின்றோம். சீனி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பில் எவ்வித பதிலும் கூறாமல் மௌனம் காத்தவர்களே தற்போது அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டிலுள்ள அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார்..
No comments:
Post a Comment