பதுளை மாவட்டத்தில் இதுவரை 490 பேர் உயிரிழப்பு, 31254 பேருக்கு கொரோனா : பாடசாலைகளில் தொற்று பரவல் தீவிரம் : சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

பதுளை மாவட்டத்தில் இதுவரை 490 பேர் உயிரிழப்பு, 31254 பேருக்கு கொரோனா : பாடசாலைகளில் தொற்று பரவல் தீவிரம் : சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தல்

பதுளை மாவட்டத்தில் இதுவரை கொவிட்19 தொற்றினால் 490 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைப் பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கொவிட்19 தொற்றினால், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்ததுடன், மாவட்டத்தின் மொத்த கொவிட்19 மரணங்கள் 490 பேராக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்ட செயலகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. பதுளை 65 பேர், பண்டாரவளை 55 பேர், எல்ல 12 பேர், ஹல்துமுள்ளை 23பேர், ஹாலிஎலை 53பேர், அப்புத்தளை 41பேர், கந்தகெட்டிய 07 பேர், லுணுகலை 15 பேர், மகியங்கனை 60பேர், மீகாகியுல 12 பேர், பசறை 31 பேர், ரிதிமாலியத்தை 12 பேர், சொரணாதொட்டை 10 பேர், ஊவா பரணகமை 33 பேர், வெலிமடை 61 பேர் என்ற வகையில் 490 பேர் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ஆரம்பம் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. 

மேற்படி 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று மட்டும் 84 பேருக்கும் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்த தொற்றாளர்களாக 31 ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு (31254) பேர் பதிவாகியுள்ளனர்.

இவ்வகையில், பதுளை 4077 பேர், பண்டாரவளை 2941 பேர், எல்ல 1370 பேர், ஹல்துமுள்ளை 1510 பேர், ஹாலி-எலை 2052 பேர், அப்புத்தளை 1874 பேர், கந்தகெட்டிய 1045 பேர், லுணுகலை 1284 பேர், மகியங்கனை 4145 பேர், மீகாகியுல 835 பேர், பசறை 1971 பேர், ரிதிமாலியத்தை 2787 பேர், சொரணாதொட்டை 604 பேர், ஊவா - பரணகமை 1767 பேர், வெலிமடை 2992 பேர் என்ற வகையில் 31254 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

நேற்று (23.11.2021) பதுளை 01. பண்டாரவளை 01, ஹாலி-எலை 01, பசறை 01 என்ற வகையில் கொவிட்19 மரணங்கள் நான்கு இடம்பெற்றுள்ளன.

தொற்றாளர்கள் 31254 பேரில் 25 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மிகுதி 6254 பேரில் 490 பேர் மரணமடைய 5764 பேர் சிகிச்சை நிலையங்களிலும், தத்தம் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பதுளை மாவட்டத்தின் சொரகுன மகா வித்தியாலயத்தில் 2,5,10 ஆகிய வகுப்புக்களைக் கொண்ட கட்டடத் தொகுதி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சமன் ஜீவந்த தெரிவித்தார்.

பாடசாலையில் 5 மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் குறிப்பிட்ட இந்த வகுப்புகள் கொண்ட கட்டடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வித்தியாலயத்தில் 40 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளில் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

வித்தியாலய அதிபர் பஞ்ஞானந்த தேரர், மூன்று வகுப்புக்களைக் கொண்ட கட்டடத் தொகுதி மூடப்பட்டிருப்பதை உறுதிபடுத்தினார்.

எனவே பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொவிட்19 தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதால் ஆசிரியர்கள் ஊடாக மாணவர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

சுகாதார ரீதியில் எவ்வாறு கட்டுப்பாடுகளுடன் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் மாணவர்கள் இன்னமும் விளையாட்டுத்தனமாகத்தான் நடந்துகொள்வார்கள்.

பதுளை விசேட நிருபர்

No comments:

Post a Comment