பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் (CIP) 225 பேர் ASP ஆக பதவி உயர்வு - பெண் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் (CIP) 225 பேர் ASP ஆக பதவி உயர்வு - பெண் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 225 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கு தகுதியான 225 பிரதான பொலிஸ் பரிசோதகர்களே இவ்வாறு, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன், நாட்டிலுள்ள 560 பொலிஸ் நிலையங்களிலும், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கான வெற்றிடங்களில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளை இணைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அதன் அடிப்படையில், அதற்கு கீழுள்ள தரங்களில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பதவி உயர்வுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அத்துடன் நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் உரிய தகுதிகளைக் கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை வெற்றிடங்களுக்கமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment