(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களை அழிக்கும் அவர்களின் காணிகளை கபளீகரம் செய்யும், உரிமைகளை தட்டிப்பறிக்கும், தடுக்கும் ஒரு மோசமான அரசியல்வாதிதான் ஹரிஸ் எம்.பி. அவர் முதலில் தனது திருட்டுத்தனமாக அரசியலை கைவிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான த. கலையரசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்,
அவர் மேலும் கூறுகையில், சபையில் உரையாற்றிய ஹரிஸ் எம்.பி. மிக மோசமாக பேசினார். முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களினால் அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம்களினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்,கொடுமைகளை உங்களை விட அதிகமாக என்னால் பட்டியலிட முடியும். ஆனால் அது இரு இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில்தான் நான் பட்டியலிடவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகளில் மேன்மையானவர்கள், நல்லவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் மிக மோசமானவர்.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடக்கும் தமிழர்களுக்கு எதிரான அத்தனை அநீதிகளையும் செய்பவர் நீங்கள். தமிழர்களின் எத்தனை காணிகளை நீங்கள் கபளீகரம் செய்துள்ளீர்கள்.
எத்தனைபேரின் அதிகாரங்களை பறித்துள்ளீர்கள். ஒரு வாரத்தில் தமிழர்களின் இரு இடங்கள் என்ற கணக்கில் காணி ஆக்கிரமிப்புகளை செய்பவர் நீங்கள். இதற்காகத்தானே நீங்கள் அரசுடன் இணைந்துள்ளீர்கள்.
நாங்கள் முஸ்லிம் மக்களை பகைக்க ஒரு போதுமே விரும்புவதில்லை. எத்தனையோ விட்டுக் கொடுப்புக்களை அவர்களுக்காக செய்துள்ளோம். அதனால் தமிழ் மக்கள் கூட எங்களை ஒதுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களை அழிக்கும் .அவர்களின் காணிகளை கபளீகரம் செய்யும் அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் தடுக்கும் ஒரு மோசமான அரசியல்வாதி.
உங்களால் கல்முனை தமிழ் மக்கள் எந்தளவு வேதனை அனுபவிக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். நீங்கள் செய்யும் அட்டூழியங்களை எம்மால் பட்டியலிட முடியும் நீங்கள் ஒரு மோசமான அரசியல்வாதி என்றார்.
No comments:
Post a Comment