(எம்.மனோசித்ரா)
விமான நிலையத்தில் 3 மணித்தியாலங்களுக்குள் முடிவுகள் கிடைக்கப் பெறும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளை இடைநிறுத்தி, மீண்டும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் மாபியாக்களுக்கு சுகாதார அமைச்சு இடமளித்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தாமல் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கின்றனர்.
ஹோட்டல்களின் முன்னெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக சுற்றுலா பயணிகளும் , விமான பயணிகளும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தனர்.
விமான நிலையத்தில் இரசாயன ஆய்வு கூடங்களை அமைத்து 3 மணித்தியாலங்களுக்குள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் இங்கு பணம் செலுத்தி பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, இலங்கை பிரஜைககள் சுகாதார அமைச்சின் ஊடாக இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் மூலம் அதிக நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மாபியாக்கள் நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் நாட்டுக்குள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்த முறைமை மாற்றப்பட்டுள்ளது.
இதுவரையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்றி எதனையும் செய்ய முடியாது என்று கூறிய சுகாதார அமைச்சு, தற்போது விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை இடைநிறுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் கொவிட் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment