(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இயற்கை திரவ எரிவாயு வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுத்தமை எமக்கு பிரச்சினையே. இது எவ்வாறு எமது நாட்டிற்கும், நல்லாட்சிக்கும், இராஜதந்திர ரீதியிலும் பதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சரவையில் முன்வைத்துள்ளேன். வடக்கிற்கான எரிபொருள் களஞ்சிய நிலையம் கிளிநொச்சியில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அதனை காங்கேசன்துறையில் வைத்திருப்பதே சிறந்தது என்கின்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எரிபொருள் விவகாரங்கள் மற்றும் கெரவலபிட்டிய மின் நிலைய உற்பத்தி குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
இயற்கை திரவ எரிவாயு உற்பத்தி விடயத்தில் எமது வளங்களை பாதுகாக்கும் உறுதியான கொள்கையில் நாம் உள்ளோம். வலுசக்தி உற்பத்தி வேலைத்திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம்மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை.
நாற்பது வீத பங்குகளை வழங்குவது குறித்தோ அபிவிருத்தி செய்வது குறித்தோ எம்மிடத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. எனது கொள்கையுடன் அது முரண்படும் காரணியும் அல்ல. சூரிய சக்தி, காற்று சக்தி உற்பத்தி நிலையங்கள் தனியார் துறையிடம் உள்ளது, அதனால் எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், கிளிநொச்சியில் எரிபொருள் களஞ்சிய நிலையம் இல்லாமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, உண்மையில் வடக்கிற்கான எரிபொருள் களஞ்சிய நிலையம் கிளிநொச்சியில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது தற்போது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.
யுத்த காலப் பகுதியில் ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தமையாலும் கப்பல்கள் மூலம் எரிபொருட்கள் வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாலுமே காங்கேசன்துறையில் எரிபொருள் களஞ்சிய நிலையம் அமைக்கப்பட்டது.
எனினும் வடக்கின் மையப்பகுதியாக கிளிநொச்சி இருப்பதாலும் வவுனியாவில் உள்ள எரிபொருள் களஞ்சிய நிலையத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பவுசர்களில் எரிபொருட்களை கொண்டு சென்று விநியோகிக்க வேண்டி இருப்பதால், ஏற்படும் செலவுகளையும் கருத்திற் கொண்டு கிளிநொச்சியில் எரிபொருள் களஞ்சிய நிலையத்தை அமைப்பது தொடர்பில் நான் அதிகாரிகளிடம் கலந்துரையாடினேன்.
ஆனால் அவர்கள் வடக்கிற்கான எரிபொருள் நுகர்வில் 100 க்கு 85 வீதம் யாழ்ப்பாணத்திலேயே இருப்பதனால் எரிபொருள் களஞ்சிய நிலையம் காங்கேசன்துறையில் இருப்பதுதான் சிறந்தது என்று கூறினர். எனினும் ஸ்ரீதரன் எம்.பி. தனது கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்தால் அது தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன் என்றார்.
No comments:
Post a Comment