வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை : ஜனாதிபதி சீர் செய்ய முயற்சித்தபோது சுற்றுச் சூழலை அழிப்பதாக சேறு பூசினர் - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை : ஜனாதிபதி சீர் செய்ய முயற்சித்தபோது சுற்றுச் சூழலை அழிப்பதாக சேறு பூசினர் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை. வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால் அவை கையகப்படுத்தப்படாது என அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதனால் எழுப்பப்பட்ட வடக்கில் இடம்பெறும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கேள்வியெழுப்புகையில், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களத்தின் கீழ் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அதன் அதிகாரிகள் மக்கள் தமது பிரச்சினைகளை கூற முயலும் போது, இன ரீதியில் வஞ்சிக்கின்ற செயற்பாடுகளே தொடர்ச்சியாக நடக்கின்றன. அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முடிவு காணப் போகின்றீர்கள்? மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகளை அனுப்புமாறு கேட்கின்றோம் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில், தேசிய வன ஜீவராசிகள் காணிகளை அடையாளப்படுத்தும் போது, மக்கள் வசிக்கும் இடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் சரணாலயப் பகுதியில் தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் பரம்பரிய விவசாய நிலங்கள் இருக்கலாம். அவை கையகப்படுத்தப்படாது. அதிகளவான வனப் பிரதேசங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை உங்கள் பிரதேசத்தில் மட்டுமல்ல. எங்கள் பிரதேசங்களிலும் உள்ளன. இதனால்தான் ஜனாதிபதி இதனை சீர் செய்ய முயற்சித்தார். இதன்போது அவர் சுற்றுச் சூழலை அழிப்பதாக அவர் மீது சேறு பூசினர்.

எங்கள் பிரதேசங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. வீடு அல்லது மலசலகூடம் வனஜீவாராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள வலயத்திற்குள் உள்ளன. ஆனால் அதனை சீர் செய்ய போகும் போது, அதனை அரசியலுக்குள் கொண்டு சென்றனர்.

அத்துடன் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக் கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டன. அவை மட்டுமே அங்கு வனஜீவராசிகள் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நீங்கள் கேட்டவாறு அதிகாரிகள் குழுவொன்றை நாம் வடக்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment