11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு கப்பம் பெற்று காணாமலாக்கிய சம்பவம் : கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறும் தீர்மானம் தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா ? - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு கப்பம் பெற்று காணாமலாக்கிய சம்பவம் : கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறும் தீர்மானம் தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா ?

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை வாபஸ் பெற சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்களன்று அறிவிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இது குறித்த எழுத்தானை நீதிப் பேராணை மனு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் சோபித்த ராஜகருனா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ரிட் மனுவானது கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆராயப்பட்டிருந்த போது, நேற்று 29 ஆம் திகதி மன்றில் விளக்கம் முன் வைக்க பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு அறிவித்தல் அனுப்பட்டிருந்தது.

அதன்படி வெள்ளிக்கிழமை (29) மனு பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் ஆலோசனை பிரகாரம் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் ஆஜரானார்.

பிரதிவாதிகளில் வசந்த கரன்னாகொடவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், சட்டமா அதிபருக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேவும் மன்றில் ஆஜராகினர்.

மன்றில் விடயங்களை முன் வைத்த மனுதரர் தரப்பு சட்டத்தரணி நுவன் போப்பகே, கரன்னாகொடவின் மீதான குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் விலக்கிக் கொள்கின்றமையானது, இயற்கை நீதிக் கோட்பட்டுக்கு மாற்றமான, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் ஆக்கும் நிலைமையை தோற்றுவிக்கும் என சுட்டிக்காட்டினார்.

இதன்போது கரன்னாகொடவுக்காக அஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, உயர் நீதிமன்றில் கைதினை தடுக்க கரன்னாகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் போது அவருக்கு எதிராக சாட்சியில்லை என தெரியவந்ததாக குறிப்பிட்டார்.

மற்றொரு பிரதிவாதியான சட்டமா அதிபருக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, இந்த ரிட் மனுவில் கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மீளப் பெற சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுவது தவறானதாகும் என தெரிவித்தர்.

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன் கொண்டு செல்வதில்லை என்றே சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் எனினும் வழக்கின் ஏனைய 13 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தில் உள்ள குற்றச்சாட்டுக்கள் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார். அதனால் தவறான விடயங்கள் அடங்கிய இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என அவர் கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என எதிர்வரும் முதலாம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment