ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பொறுப்புக் கூறலையும், நீதி நிலைநாட்டப்படுதலை உறுதிப்படுத்தக் கோரியும் மேலும் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினரும் ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி வழங்குவதற்கு பதிலாக காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அலுவலகத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு திணிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்ற தலைப்பில் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், இலங்கை அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அலுவலகத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு நீதிக்காக போராடுபவர்களுக்கு திணித்து வருவதோடு அந்த அலுவலகம் முறையான விசாரணைகள் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரின் இறுதியில் தமது கண்களுக்கு முன்னால் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாதுள்ளது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, சரணடைந்தவர்களுடன் முப்பது குழந்தைகள் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு அந்தக் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் அலுவலகத்தினை முழுமையாக நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளதோடு தாங்கள் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கம் மிருசுவில் படுகொலை குற்றவாளியான சாஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவித்தமை, 11 இளைஞர்களின் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்க முடியாதென அறிவிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment