புனித யாத்திரைகள் அல்லது சுற்றுலாக்கள் மற்றும் இதுபோன்ற தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேறியோர் செல்ஃபிக்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு பதிவிடும் தகவல்கைளப் பயன்படுத்தி, திருடர்கள் வீடுகளை கொள்ளையடிக்க வசதி ஏற்படுவதாகவும் பொலிஸார் விளக்கியுள்ளனர்.
குடும்பங்கள் பல புனித யாத்திரைகள், உல்லாசப் பயணங்கள் மற்றும் பல்வேறு பயணங்களுக்காகப் பயணம் செய்கின்றன. சிலர் தங்கள் பயணத் திட்டங்களை அறிவிப்பதையோ அல்லது நுவரெலியா, காலி அல்லது கதிர்காமத்தில் இருப்பதாகக் காட்டும் செல்ஃபிகளையோ சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிர்வதை அவதானிக்க முடிகிறது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இப்பதிவுகள் வாய்ப்பாக அமைவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பத்தரமுல்லையிலுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே,பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், புனித யாத்திரைக்காக வீட்டிலிருந்து வௌியேறியுள்ளோர் அல்லது சுற்றுலாக்களுக்குச் சென்றுள்ளோர், செல்ஃபிக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். தமது வீடுகள் பாதுகாப்பற்றிருப்பதாக, தாமாகவே விளம்பரம் செய்வதாக இது, அமைந்துள்ளது.
திட்டமிட்டு திருடும் கும்பல்கள் இத்தகவலைப் பயன்படுத்தியே, மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த செயன்முறைகள் பொருத்தமானதல்ல. இதுபோன்ற தகவல்கள், வீடுகளில் எவரும் இல்லாதுள்ளதை திருடர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும், இவ்வாறான பயணங்களின்போது நன்கு பரிட்சயமான சாரதிகளை அழைத்துச் செல்லுங்கள். குடும்ப இரகசியங்களை பேணும் நம்பிக்கைக்குரிய சாரதிகளையே பாடசாலை போக்குவரத்திலும் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியிள்ளார்.

No comments:
Post a Comment