ஞானசார தேரர் கூறுவதை போன்று தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முயற்சிகளை மேற்கொள்வோம் என்கிறார் சரத் வீரசேகர : முஜிபூர் ரஹ்மானின் கேள்விக்கு நேரடியாக எந்த பதிலையும் வழங்காதும் மழுப்பிச் சென்றார் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

ஞானசார தேரர் கூறுவதை போன்று தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முயற்சிகளை மேற்கொள்வோம் என்கிறார் சரத் வீரசேகர : முஜிபூர் ரஹ்மானின் கேள்விக்கு நேரடியாக எந்த பதிலையும் வழங்காதும் மழுப்பிச் சென்றார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஞானசார தேரர் கூறுவதை போன்று எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டில் நடப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்ளும். கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சபை ஒத்திவைப்பு வேளை நேரத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பி கூறுகையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், எதிர்காலத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார். அவரிடம் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் இருப்பதாகவும், அந்தக் குழுக்களை அவர் அறிந்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், வெடிக்கச் செய்வதற்கான பொருட்கள் தயாராக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அவர் இப்படி கூறுவராக இருந்தால், அவருக்கு சகல தகவல்களும் தெரியும் என்றே கூறலாம். இந்த அரசாங்கம் சுற்றுலா பயணிகளை அழைத்துவர பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. மிகவும் வேகமாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறான பின்னணியில் குறித்த தேரர் இவ்வாறு கூறும் போது சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் வருவார்களா? இவ்வாறாக கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவருக்கு தகவல்கள் தெரியும் என்று அவரால் குறிப்பிடப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? என்று கேட்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில், இது தொடர்பில் தேரரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. தேரரின் உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரிடம் விசாரித்த போது, பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அல்குர்ஆனின் சில விடயங்களை உள்ளடக்கியே கூறியதாகவும், அத்துடன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் அப்துர் ராசீகினால் சிங்கள மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டே அந்தக் கருத்தை கூறியதாகவும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் தூண்டப்படுவது தொடர்பாகவே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிந்தித்து செயற்படா விட்டால் எந்த நேரத்திலும் தனியாகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினை விடுதலைப் புலிகள் போன்றது அல்ல. இது மிகவும் ஆபத்தானது. இதனால்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கையெடுக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஞனசார தேரர் முதலில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் அனர்த்தத்தை தடுத்திருக்கலாம். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அறிந்துள்ள தாக்குதல்களை தடுப்பதற்கு நாங்கள் முடிந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

அச்சுறுத்தல் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவது குறித்து நாங்கள் அவருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றோம். நாங்கள் கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்வோம் என்பதுடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டியவர்களை அதற்கு அனுப்புவோம்.

ஐஎஸ் கொள்கை எந்தவொரு முஸ்லிம் இளைஞனிடத்திலும் ஏற்படலாம். நியூசிலாந்தில் அந்த இளைஞனை விடுவித்த பின்னரே அவர் தாக்குதலை நடத்தியுள்ளார். ஞானசார தேரர் கூறுவது என்னவென்றால், ஐஎஸ் கொள்கை இருக்கும் வரையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதனையே கூறியுள்ளார். அதனையே தடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள் என்றே கேட்கின்றோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து முஜிபுர் ரஹ்மான் எழுந்து, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் என்று ஞானசார தேரரின் கருத்து இஸ்லாத்தை பின்பற்றும் கோடிக்கணக்காண முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தும் கூற்று. இது இனங்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படுத்தம் செயல். இது தொடர்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்டதற்கு, அமைச்சர் வீரசேகர நேரடியாக எந்த பதிலையும் வழங்காது, மழுப்பிச் சென்றார்.

No comments:

Post a Comment