77 வீத மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் : ஜனாதிபதியும், பிரதமரும் திருட்டுத்தனமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளார்கள் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

77 வீத மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் : ஜனாதிபதியும், பிரதமரும் திருட்டுத்தனமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளார்கள் - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் காரணமாக மரணித்தவர்களில் 77 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்காதமையே இதற்கு காரணமாகும். அதனால் இந்த மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார பிரிவினரால் வழிகாட்டல் ஒன்றை அரசாங்கத்துக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றே தெரிவித்திருந்தது.

ஆனால் கொவிட் தொடர்பான ஜனாதிபதி செயலணி அதனை ஏற்றுக்கொள்ளாமல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். அதன் விளைவாகவே இன்று கொவிட் காரணமாக மரணித்த மொத்த எண்ணிக்கையில் 77 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும். இந்த மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

மேலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கா விட்டாலும் 60 வயதை தாண்டி இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் திருட்டுத்தனமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எந்த தடுப்பூசி ஏற்றினார்கள் என்பதை கூட வெளிப்படுத்த வில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றிக் கொண்டுள்ள தடுப்பூசி தொடர்பாக அரச தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் தடுப்பூசி ஏற்றிய உடனே அது தொடர்பில் வெளிப்படுத்தினார்.

மேலும் கொவிட் பரவல் தீவிரமாகும்போது நாட்டை முடக்குமாறு ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் இருந்து வைத்தியர்கள் தெரிவித்து வந்தனர். அதேபோன்று ஏனைய துறைசார்ந்தவர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தபோது வியாபாரிகள் சுயமாக தங்கள் கடைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் எம்மை விமர்சித்தார்கள்.

என்றாலும் இறுதியில் அரசாங்கம் கடந்த மாதம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்தது. அதனையும் முறையாக செய்யவில்லை. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் வீதியில் நடமாடுகின்றனர். ஆனால் பாடசாலைகளை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் கொவிட் கட்டுப்படுத்தும் குழுவில் இருந்து வைத்தியர்கள் விலகுகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாமல் அவர் நினைத்த பிரகாரம் செயற்படுகின்றார். அதேபோன்று அரச அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். அவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது. இன்று அரச நிறுவனங்களுக்கு நியமிக்க புத்திஜீவிகள் இல்லை. அதனால் பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் பதவி விலகி, அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment