அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.ராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.ராதாகிருஷ்ணன்

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் அதிகரித்திருப்பது போல் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விபாபாரிகளுக்கு வழங்கப்படும் தண்டப்பணம் அதிகரித்திருப்பது நல்ல விடயமாகும். அதேபோன்று அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விபாரிகளுக்கு கடன் எல்லை தற்போது நடைமுறையில் இல்லை. அதனால் அந்த வியாபாரிகள் போதுமானளவு அத்தியாவசிய பொருட்களை சேர்த்து வைப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஏனெனில் பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் வியாபாரிகளுக்கு அந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அதனால் இன்று கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இரண்டு தரப்பினரையும் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்களின் பிரச்சினை தீர்க்காமல் அரசாங்கம் மதுபான சாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேபோன்று ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்து வைத்து அவர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்த்தால்தான் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடங்கலாம்.

அத்துடன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் கூட்டத்துக்கு சென்று, புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு தயார் என தெரிவித்திருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

அதேபோன்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இலங்கை இந்திய நட்புறவை மேலும் அதிகரிகச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவுடன் நல்ல உறவை பேணி இருந்தால் எமக்கு அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அதனால் அரசாங்கம் எதிர்காலத்தில் எமது அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment