(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் இராணுவ மயமாக்கலை நடைமுறைப்படுத்தவே அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்காக பல நாடகங்களை அரசு அரங்கேற்றுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசிய சேவைகளை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 3 அல்லது 17 ஆம் பிரிவை கொண்டுவந்திருக்கலாம்.
அரசு பல நாடகங்களை நடத்துகின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. நுகர்வோர பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தியிருக்கும் களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்கும் காட்சிகளை ஒவ்வொரு நாளும் காட்சிப்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் மக்களை அரசு ஏமாற்றுகின்றது. வலுக்கட்டாயமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்நிய செலாவணி பிரச்சினையால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட மறுதினமே சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டன. இலங்கை லெபனானின் நிலைக்கு செல்வதாக கூறப்படுகின்றது. லெபனானில் 70 வீதம் வறுமை. அந்த நிலைக்கே இலங்கையும் செல்கின்றது என்றார்.
No comments:
Post a Comment