எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திற்கு லொறி ஒன்றில் அத்தியாவசிய சேவைகள் எனக் குறிப்பிட்டு 350 யூரியா உரைப்பை மூடைகளை கடத்திச் சென்ற இருவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவுடன் இணைந்து மாவட்ட விசேட புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று மாலை 5 மணியளவில் நிந்தவூர் பகுதி வீதியில்; கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு எம்பலப்பிட்டியில் இருந்து சென்ற லொறியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கிராம் கொண்ட 350 உரப்பை மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து லொறி சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை கைது செய்ததுடன் 350 உரப்பை மூடைகளையும் லொறியையும் மீட்டனர்.
இவ்வாறு மீட்டகப்பட்ட யூரியா மூடைகள் லொறி மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment