பாரதூரமான குற்றங்கள் எதனையும் புரியாமல் சிறையில் துன்பத்தை அனுபவித்து வரும் ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரிகா - News View

About Us

About Us

Breaking

Saturday, September 11, 2021

பாரதூரமான குற்றங்கள் எதனையும் புரியாமல் சிறையில் துன்பத்தை அனுபவித்து வரும் ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரிகா

நா.தனுஜா

பாரதூரமான குற்றங்கள் எதனையும் புரியாமல் சுமார் 8 மாத காலமாக சிறையில் துன்பத்தை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதியிலிருந்து நான்கு வருட கால சிறைத் தண்டனைக்கு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

நடிகர், சமூக சேவையாளர், அரசியல்வாதியென்ற பன்முக அடையாளங்களைக் கொண்ட அவர், நாட்டு மக்களின் நலனுக்காகப் பலர் செய்வதற்கு முன்வராத விடயங்களைச் செய்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒருவராவார். அதுமாத்திரமன்றி அவர் அப்பாவிப் பொதுமக்களின் நல்வாழ்விற்காகத் தனது சொந்தப் பணத்தையும் செலவிட்டிருக்கின்றார்.

பாரதூரமான குற்றங்களைப் புரிந்தமைக்காக நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட பலர் உங்களுடைய அரசின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அந்தளவிற்கு மிகவும் மோசமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாத ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தண்டனை அனுபவிப்பது மிகவும் துரதிஷ்டவசமான விடயம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களென நம்புகின்றேன்.

எனவே சுமார் 8 மாத காலமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பை வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு இந்நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் உங்களிடம் கோருகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய சிறைக் கைதிகள் தினமான நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரபல நடிகரும் மக்களுக்குச் சார்பான அரசியல்வாதியுமாகிய ரஞ்சன் ராமநாயக்கவிற்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வார் என்று எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment