அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர் : இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 18, 2025

அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர் : இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி

இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

உவிந்து குருகுலசூரிய, தான் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படத்துடன், அர்ஜுன மகேந்திரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்களத்தில் இட்ட பதிவில், அர்ஜுன் மகேந்திரன் தன்னுடன் பல விடயங்கள் குறித்துப் பேசியதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு ஆலோசனையைத் தெரிவிக்குமாறு கோரியதாகவும் குருகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தான் மறுத்து விட்டதாகவும், இந்த உரையாடலில் பல கதைகள் இடம்பெற்றதாகவும், மகேந்திரனைத் தனக்கு மூன்று தசாப்தங்களாகத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் மகேந்திரன், 2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி ஏலத்தில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பிணை முறி சர்ச்சை ஏற்பட்டபோது, மகேந்திரன் சிங்கப்பூரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்வதாக அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்பவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவந்து சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வைப்பதாக உறுதியளித்திருந்தார்.

எனினும் இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இரு தரப்பு பிணைக் கைதி ஒப்பந்தம் இல்லாததை காரணம் காட்டி, இலங்கையின் மறுபத்திரமளிப்புக் கோரிக்கையை (Extradition Request) சிங்கப்பூர் நிராகரித்திருந்தது.

ஊடகவியலாளர் குருகுலசூரியவால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய புகைப்படம், அர்ஜுன் மகேந்திரனை நீதிக்கு முன் கொண்டுவரும் நீண்டகால முயற்சி குறித்த பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment