(இராஜதுரை ஹஷான்)
உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அனைத்து துறைகளிலும் பாதிப்புக்கள் காணப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களை சந்தையில் தடையின்றி பெற வேண்டுமாயின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலில் டொலரை கையிருப்பில் தக்க வைத்துக் கொள்வது சவால்மிக்கதாக உள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையினை இயலுமான அளவில் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம். 27 அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத் தன்மையுடன் பேணப்படுகிறது. அரசாங்கத்தின் விலை நிர்ணயத்திற்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை 2500 ரூபாவிலிருந்து ஒரு இலட்சமாக அதிகரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினாலும், போக்கு வரத்து கட்டண அதிகரிப்பினாலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையினை தற்போதைய சூழ்நிலைக்கு அமைய தற்காலிகமாக அதிகரிக்க முடியும் என நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. விலையேற்றம் குறித்த தீர்மானம் நாளை இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும்.
அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் பொருட்களின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கை குறித்து கவனம் செலுத்தா விட்டால் அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். மறுபுறம் நுகர்வோர் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். டொலர் நாணய அலகு போதுமான அளவு கையிருப்பில் இல்லை.
உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் போது தேசிய மட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என்றார்

No comments:
Post a Comment