எம்.மனோசித்ரா
போக்குவரத்து கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமையின் காரணமாகவே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைக்கப்பட்டமையினால் அல்ல என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது முக்கியத்துவமுடையது என்ற போதிலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் ஊழியர்களை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள பலவந்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சினால் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பி.சி.ஆர். பரிசோதனைகள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. நாளாந்தம் 9000 - 12 000 பி.சி.ஆர். பரிசோதனைகளும், சுமார் 3000 அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே கொவிட் பரிசோதனைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த ஒரு மாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கொவிட் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளன.
கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும். ஆனால் அதனை பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்களை பலவந்தப்படுத்துமாறு எந்தவொரு நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்படவில்லை. அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டால் அது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment