கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் முதன்முறையாக மைதானத்துக்கு இரசிகர்களை அழைப்பது தொடர்பில் லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒத்தி வைக்கப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
ஐந்து அணிகள் மோதும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவ கால போட்டிகள், 2020ம் ஆண்டு போன்றே ஒரு மைதானத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்துக்கு இரசிகர்களை அழைப்பது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் மருத்துவ துறையின் தலைவர் அர்ஜுன டி சில்வா கருத்து வெளியிடுகையில்,
“எமது இரசிகர்களை இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு, உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றிருந்தால், மைதானத்துக்கு 25 சதவீத இரசிகர்களை அனுமதிக்க முடியும்.
தற்போதைய நிலையில், நாட்டில் 54 சதவீத பேருக்கு இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த சதவீதம் 70 தொடக்கம் 75 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படலாம். சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இரசிகர்கள் அரங்கத்தை எம்மால் திறக்க முடியும்” என்றார்.
அதேநேரம், “லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு மாத்திரமல்லாமல், அடுத்து நடைபெறவுள்ள அனைத்து தொடர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இரசிகர்களை அனுமதிப்பது தொடர்பிலும், ஆராய்ந்து வருகின்றோம்” என மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment