ஆன்மிக மருத்துவர் என அழைக்கப்படும் எலியந்த வைட் (Eliyantha White) கொவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வார காலம் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மூலிகைகள் மூலம் நோய்களை குணப்படுத்துபவர் என அறியப்படும் இவர் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் அல்ல.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவ ஆலோசகராக இருந்து வந்த, பிரித்தானிய பூர்வீகத்தைக் கொண்ட எலியந்த வைட், ஆரம்ப காலத்தில் மாதிவலவிலுள்ள ஈயம்போருவ எனும் விகாரையில் இவ்வாறு மருத்துவ விடயங்களை மேற்கொண்டு வந்ததோடு, பின்னர் நாளாந்தம் சுமார் 1,000 பேர் வரை பல்வேறு நோய்கள் தொடர்பில் இவரை நாடும் அளவுக்கு பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து லசித் மாலிங்க, சச்சின் டெண்டுல்கர் சல்மான் கான், இயன் சப்பல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு மாத்திரம் தனது மருந்துகளை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, கொவிட்-19 தொற்று பரவல் ஆரம்ப காலத்தில் அதனைக் கட்டுப்படுத்த, கலவையொன்று அடங்கிய முட்டியை ஆறுகளில் இடுமாறு தெரிவித்திருந்தார்.
அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment