தனியார் துறையை மாத்திரம் நம்பி பொருளாதாரத்தை பாதுகாத்துக் காெண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்பது தெளிவாகி இருக்கின்றது. அதனால் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை உணவுத் திணைக்களத்தில் சேமித்து அரச துறையை வலுப்படுத்த வேண்டும்.அத்துடன் ஜனாதிபதி அவசரகால சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்தியது நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்களின் தொகை அரசாங்கத்தின் கையிருப்பிலும் இருக்க வேண்டும். அதன் மூலமே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதை தடுக்கலாம். அதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக உணவு திணைக்களத்தில் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தி வந்தால் அனர்த்த நிலைமைகளின்போது மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மாத்திரம் அல்ல. மருந்து பொருட்களும் பாரிய கொள்ளை லாபத்துக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒக்சி மீட்டர் உபகரணம் கொள்வனவிலும் பாரிய மோசடி இடம்பெறுவதுடன் பொதுமக்களை ஏமாற்றி தரம் குறைந்த உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடுக்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment