வியாபாரிகள், பிரதான நிலை உற்பத்தியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

வியாபாரிகள், பிரதான நிலை உற்பத்தியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை நிவாரண விலைக்கு விற்பனை செய்யப்படும். ஆகவே வியாபாரிகள், பிரதான நிலை உற்பத்தியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரண அடிப்படையில் விநியோகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

அரிசி விலையை நிர்ணயத்தன்மையில் பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதன் காரணமாக ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 150 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன.

விவசாயத்துறை அமைச்சு, வர்த்தகத்துறை அமைச்சு ஒன்றிணைந்து அரிசியின் விலையை நிர்ணய தன்மையில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இதற்கமைய பெரும்போக விளைச்சலை தொடர்ந்து நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 98 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 103 ரூபாவிற்கும் வழங்க பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் வாக்குறுதியளித்தார்கள்.

இருப்பினும் கடந்த இரு வார காலமாக அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு முறையாக அரிசியை விநியோகிக்கவில்லை. அத்துடன் சதொச நிறுவனத்தின் விலைமனுக் கோரலுக்கு சமூகமளிக்கவுமில்லை.

வழமையாக ஒரு நாளைக்கு 5 தொடக்கம் 6 இலட்சம் கிலோ வரையிலான அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் பிரதான நிலை உற்பத்தியாளர்கள் கடந்த இரு வாரங்களில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கிலோ அரிசியை மாத்திரம் சந்தைக்கு விநியோகித்தார்கள்.

அரிசி விநியோகத்தை குறைத்து சட்டவிரோதமான முறையில் அரசியை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு பிரதான நிலை அரிசி உற்பத்தியார்கள் வகுத்த சூழ்ச்சி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக நிவாரண விலைக்கு விற்பனை செய்யப்படும்.

ஆகவே வியாபாரிகள், அத்தியாவசிய பொருள் உற்பத்தியாளர்கள் அத்தியாவிய பொருட்களை பதுக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சீனி பிரச்சினைக்கு தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச சில்லறை விலை 116 ரூபாவாகவுள்ளது. ஓரிரு வாரங்களில் சீனியின் விலை நிர்ணய தன்மை பேணப்படும். நுகர்வோர் சதொச விற்பனை நிலையத்தில் 3 கிலோகிராம் சீனியை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment