இந்திய அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவித்து மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தி திவஸ் நிகழ்வையொட்டி பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாய் மொழியுடன் மக்கள் இந்தி மொழியையும் சேர்த்துக் கற்க வேண்டும் என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள டாக்டர் ராமதாஸ், "தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது.
அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச் சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.
"இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு. அவ்வாறு கூறக்கூடாது!"
"இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment