எம்.மனோசித்ரா
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொவிட் பரவல் இரண்டாம் அலையில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைப் போன்ற நிலைமையே தற்போது இலங்கையிலும் காணப்படுகிறது. உலகில் அதிக மரண வீதம் பதிவாகிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடிக்கக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் இரண்டாம் அலையில் கொவிட் மரணங்கள் அதிகரித்துச் சென்றமை தொடர்பான வரைபுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மரணங்கள் அதிகரித்துச் செல்லும் வேகம் தொடர்பான வரைபு உயர்மட்டத்தில் காணப்படுகிறது.
அதற்கமைய அவதானிக்கும் போது எதிர்வரும் வாரங்களில் உலகில் கொவிட் மரண வீதம் அதிகமாகக் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடிக்கக்கூடும். காரணம் தற்போது பெருமளவான வைத்தியசாலைகளில் கொள்ளளவை மீறிய தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமயை தடுப்பதற்கு மேலும் தாமதிக்காது நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இதற்கு 60 பில்லியன் ரூபாய் கூட செலவாகாது. அத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் தாமதிக்காது பொறுப்புடன் சென்று தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment