இலங்கையில் 118 இற்கும் அதிகமான டெல்டா தொற்றாளர்கள் : படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஆலோசனை : தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும் அநாவசிய போக்கு வரத்துக்களை தவிருங்கள் : கொவிட் தொற்றாளர்களின் அறைகளுக்கு சீல் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

இலங்கையில் 118 இற்கும் அதிகமான டெல்டா தொற்றாளர்கள் : படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஆலோசனை : தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும் அநாவசிய போக்கு வரத்துக்களை தவிருங்கள் : கொவிட் தொற்றாளர்களின் அறைகளுக்கு சீல் - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 118 டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர் என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவலாகும். காரணம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் முன்னெடுக்கப்படும் மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனை அறிக்கைக்கமைய இதற்கும் அதிகமான டெல்டா தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சகல வைத்தியசாலைகளிலும் தேவைக்கேற்ப கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது மாத்திரமின்றி, அவர்களில் பெருமளவானோர் தீவிரமான அறிகுறிகளை உடையவர்களாகவும், ஒட்சிசன் தேவையுடையவர்களாகவும் உள்ளனர். இதனை பாரதூரமான வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையை சுகாதாரத் துறைக்கு கட்டுப்படுத்த முடியாது என்று நாம் கூறவில்லை. கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்கு சகலரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சகல வைத்தியசாலைகளிலும் தேவைக்கேற்ப கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே நிலைமை தொடர்வதை சிறப்பானதாகக் கருத முடியாது. நிலைமையை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

வைத்தியசாலைகளின் கொள்ளளவிற்கு அதிகமாக தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போது கொவிட் நிலைமையின் போது மாத்திரமல்ல, எந்தவொரு அனர்த்த நிலைமையின் போது அவசர நிலையை அறிவிக்க முடியும். அதற்கமைய அவசர நிலைமையை அறிவித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இரு கட்டங்களாகவும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவதால் மாத்திரம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மாறாக தடுப்பூசியைப் பெற்றவர்கள் தொற்றுக்கு உள்ளான போதிலும் தீவிர நிலைமைக்கு செல்வதையும் ஏனையோருக்கு பரப்பும் வேகத்தை குறைக்கவும் முடியும். எனவே இரு கட்டங்களாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களாக இருந்தாலும் அநாவசிய போக்குவரத்துக்களை தவிர்க்க வேண்டும்.

கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளின் வெளிப்புறங்களில் உள்ளதாகக் சில புகைப்படங்கள் , காணொளிகள் வெளியாகியுள்ளன. ஆனால் சகல வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதாவது அந்த பகுதியிலிருந்து எந்த நோயாளருக்கும் ஏனைய பகுதிகளுக்கு செல்ல முடியாது. அவ்வாறிருக்கையில் கொவிட் நோயாளர்கள் இவ்வாறு நெறிசலாகக் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று நாம் எண்ணவில்லை.

அறிகுறியற்ற அல்லது தீவிர நிலைமையை அடையாத மேல் மாகாணத்தில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சையளிக்கும் முறைமை தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருகிறது.

வீட்டில் அதற்கான வசதி இல்லையெனில் அவர்கள் வைத்தியசாலைகளில் அல்லது இடைநிலை சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறான நிலைமையில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும்.

சமூகத்தில் டெல்டா தொற்றாளர்கள் 118 பேர் மாத்திரமே இருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் முன்னெடுக்கப்படும் மரபணுவின் ஒழுங்கமைப்பை அறியும் பரிசோதனை அறிக்கைக்கமைய இதற்கும் அதிகமான டெல்டா தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்று மதிப்பீட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment