(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இச்சட்ட மூலம் தொடர்பில் எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்களில் 30,000 - 35,000 வரையிலான மாணவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது.
வசதி உள்ள மாணவர்கள் அதிக பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள். ஏனைய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு என்பது வெறும் கனவாக அமைந்து விடுகிறது. இவ்வாறான நிலையில் இலவச கல்வி முழுமையடையவில்லை என்றே கருத வேண்டும்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கல் என்பது சுபீட்சமான கொள்கையாக காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகளை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.
No comments:
Post a Comment