தடுப்பூசி பெற்றிருப்பின் உம்ராவுக்கு அனுமதி : வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு எல்லைகளைத் திறந்தது சவூதி அரேபியா - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

தடுப்பூசி பெற்றிருப்பின் உம்ராவுக்கு அனுமதி : வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு எல்லைகளைத் திறந்தது சவூதி அரேபியா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று (9) முதல் அனுமதி வழங்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சவூதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்ரா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக 20 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் சவூதி அரேபிய தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களின் உம்ரா யாத்திரைக்கான கோரிக்கையின் போது, கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இணைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சவூதி அரேபியாவின் நுழைவு அனுமதி இல்லாத நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட யாத்திரிகர்கள், சவூதியை வந்தடைந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, ஓக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி, மாடர்னா தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த நான்கு தடுப்பூசிகளையும் சவூதி அரேபிய அரசு அங்கீகரிக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தேவைப்பட்டால் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுக் கொள்ள வேண்டுமென்று சவூதி அரேபியாவின் ஹஜ் இணை அமைச்சர் அப்துல் ஃபட்டா பின் சுலைமான் தெரிவித்துள்ளார் என்று சவூதி  ப்ரஸ் முகமை கூறுகிறது.

சவூதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment