எம்.மனோசித்ரா
இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டமையே இலங்கையில் டெல்டா பரவல் தீவிரமடைய பிரதான காரணமாகும். எனவே தற்போது இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நான்காவது அலை கட்டுப்பாட்டை மீறி முழு நாடும் பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் கொவிட் பரவல் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்த போது அரசாங்கம் அதனை கேலிக்குள்ளாக்கியது. இதனை விட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகக் கூறிய அரசாங்கம், நாளாந்தம் 3000 பேர் உயிரிழந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எமக்கு இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என்றும் கூறியது.
அரசாங்கத்தின் இவ்வாறான அசமந்த போக்கே நாடு தற்போதுள்ள நிலைமைக்கு காரணமாகும். அரசாங்கத்தின் முட்டாள்த்தனமான முடிவுகளும், வியாபார நோக்கமும், அரசியல் நோக்கமும் இந்த பாரதூமான விளைவுகளுக்கான காரணம் ஆகும். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment